Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Thursday, May 7, 2026

இலங்கையைச் சூழ்ந்துள்ள சர்வதேச இணைய மோசடிகள்! நமது பாதுகாப்பு நமது கையில்...

இலங்கையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்தளவுக்கு முன்னேறியுள்ளதோ, அதே அளவுக்கு இணையம் வழி நிகழும் குற்றச் செயல்களும் மிகவும் நுணுக்கமான முறையில் விரிவடைந்துள்ளன. இதற்குச் சான்றாக, அண்மையில் ராஜகிரிய பகுதியில் வெளிநாட்டு பிரஜைகள் சுமார் 120 பேர் இணைய வழி மோசடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை குறிப்பிடலாம். அத்துடன் தலங்கம பகுதியிலும் சீனப் பிரஜைகளால் நடத்தப்பட்ட பாரிய இணைய மோசடி மையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 37 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த வார இறுதியில் பதிவாகியுள்ளது. இவ்வாறான பாரியளவிலான மோசடி நடவடிக்கைகள் இலங்கையை மையமாகக் கொண்டு இடம் பெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவை இலங்கை பிரஜைகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு இயங்கும் தளங்கள் அல்ல, மாறாக இந்த நவீன மோசடி மையங்கள் சர்வதேச ரீதியாகப் பலரை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டு இயங்குகின்றன. 

இத்தகைய சூழலில், 2026 ஆம் ஆண்டில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையம் ஊடாக நம்மை எவ்வாறெல்லாம் ஆபத்துகள் நெருங்குகின்றன என்பது குறித்து ஒவ்வொரு இலங்கையரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்றைய காலகட்டத்தில் 'டீப்ஃபேக்' எனப்படும் போலி பிம்பங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நாம் பதிவிடும் ஒரு சிறு புகைப்படத்தையோ அல்லது காணொளியையோ கொண்டு, நம்மைப் போன்றே பேசும் மற்றும் செயல்படும் போலியான உருவங்களை மோசடிக்காரர்களால் உருவாக்கிவிட முடியும். இது தனிமனித கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, நிதி மோசடிகளுக்கும் வழிவகுக்கிறது. 

உதாரணமாக, உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரின் குரலில் உங்களுக்கு ஒரு அழைப்பு வரலாம். அதில் அவர் தான் ஒரு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும் பதற்றத்துடன் கூறக்கூடும். உண்மையில் அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அவரது குரலாக இருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் மாற்று வழியில் அவர்களைத் தொடர்புகொண்டு உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதே புத்தி சாதுர்யமானதாகும். 

இவ்வாறு, அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரபலங்கள் போன்று பேசும் காணொளிகள் ஊடாக முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றன. ஆனால் அவை போலியானவையாகும். இது போன்ற விடயங்களை உத்தியோகபூர்வ தளங்கள் மூலம் உறுதிப்படுத்திவிட்டே முதலீடு செய்வது தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டும். 

அத்துடன், தரவு திருட்டு என்பது கண்ணுக்குத் தெரியாத போராக மாறிவிட்டது. நாம் பயன்படுத்தும் செயலிகள் நம்மிடம் கோரும் அனுமதிகள் குறித்து நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. ஒரு புகைப்படத் திருத்தச் செயலிக்கு நமது இருப்பிடத் தகவலோ அல்லது தொடர்புகளோ தேவையில்லை என்பதை நாம் உணர வேண்டும். தேவையற்ற செயலிகளுக்கு அனுமதிகளை வழங்குவது, நமது அந்தரங்கத் தகவல்களை அந்நியர்களுக்கு விற்பனை செய்வதற்குச் சமமாகும். 

இணையத்தில் நாம் தேடும் தகவல்கள், நாம் வாங்கும் பொருட்கள் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நம்மை ஈர்க்கும் வகையிலும், ஏமாற்றக்கூடிய வகையிலும் விளம்பரங்களும் செய்திகளும் வடிவமைக்கப்படுகின்றன. அதனால் இணையத்தைப் பயன்படுத்தும் போது எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியமாகும்.

நிதி சார்ந்த மோசடிகள் தற்போது குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் வழியாகத் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக இலங்கையில் பாரிய வருமானம் ஈட்டலாம் என்ற ஆசையைத் தூண்டும் 'ஒன்லைன் வேலைவாய்ப்பு' விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. ஆரம்பத்தில் சிறிய தொகையை இலாபமாகக் கொடுத்துவிட்டு, பின்னர் பெரிய முதலீடுகளைச் செய்யத் தூண்டி பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் கும்பல்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதேபோல் வங்கிகளில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி (OTP)  எண்களைக் கேட்பவர்களிடம் எக்காரணம் கொண்டும் தகவல்களைப் பகிரக்கூடாது. எந்தவொரு வங்கியும் தொலைபேசி ஊடாக இத்தகைய இரகசிய எண்களைக் கோருவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது டிஜிட்டல் கதவுகளைப் பலமாகப் பூட்டி வைப்பது நமது பொறுப்பாகும். பலவீனமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஒவ்வொரு கணக்கிற்கும் வெவ்வேறு கடினமான கடவுச்சொற்களை உருவாக்குவதுடன், இரட்டை காரணி (2FA) சரிபார்ப்பு முறையை அனைத்துச் செயலிகளிலும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். 

இணையம் என்பது ஒரு மிகப்பெரிய கடல், அதில் பாதுகாப்பாகப் பயணம் செய்ய விழிப்புணர்வு என்ற கவசத்தை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். நாம் பகிரும் ஒவ்வொரு தகவலும், நாம் அழுத்தும் ஒவ்வொரு லிங்கும் நமது பாதுகாப்பைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்பட்டால், டிஜிட்டல் உலகத்தை அச்சமின்றிப் பயன்படுத்தலாம்.

✍️ நுஸ்கி முக்தார் 
இலங்கை பாராளுமன்றம்

(நன்றி: விடிவெள்ளி 2026.05.07)


No comments: