இலங்கையின் நிதித்துறை அண்மையில் ஒரு பாரிய டிஜிட்டல் அதிர்வை எதிர்கொண்டது. அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிறுவனத்திற்கு (Australian Export Finance Agency) செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, திட்டமிட்ட முறையில் இணையக் கொள்ளையர்களால் திசைதிருப்பப்பட்டுள்ளது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சி குறித்து சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இச்சம்பவம் நமது 'இறைமை சார்ந்த நம்பகத்தன்மைக்கு' (Sovereign Credibility) விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
நிதி அமைச்சுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் இடையிலான மின்னஞ்சல் தொடர்புகளை இடைமறித்த ஹேக்கர்கள், வங்கிக் கணக்கு விபரங்களை மிக நுட்பமாக மாற்றி இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளதாக தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ள தவகல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இந்தியாவிற்குச் சேர வேண்டிய மற்றுமொரு கொடுப்பனவையும் இதே பாணியில் கொள்ளையடிக்க இவர்கள் முயன்றபோதுதான் இவர்களின் திட்டம் வெளிப்பட்டுள்ளது. இது வெறும் பண மோசடி மட்டுமல்ல, நமது தேசிய நிதிசார் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு முக்கிய தூணாக டிஜிட்டல் பாதுகாப்பு மாறவேண்டிய அவசியத்தை உணர்த்தும் சிவப்பு எச்சரிக்கையாகும்.இலங்கையில் அதிகரித்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்கள்
இலங்கை தற்போது அதிகரித்த டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (Sri Lanka CERT) 2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இணையப் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 12,650 ஐ தாண்டியுள்ளது.
இலங்கையில் பதிவாகும் முக்கிய அச்சுறுத்தல்கள்:
1. நிதி மோசடிகள்: வங்கித் தரவுகளைத் திருடி பணத்தைக் கொள்ளையடித்தல்.
2. சமூக ஊடக முறைகேடுகள்: போலி கணக்குகள் மற்றும் தனிநபர் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல்.
3. கணக்கு ஊடுருவல்கள் (Hacked Accounts): மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை முடக்குதல்.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இளைஞர்கள் சமூக ஊடகங்களின் ஊடாகவும், முதியவர்கள் "அதிகாரத்திற்கு மதிப்பளிக்கும்" அவர்களின் பண்பைப் பயன்படுத்தி நிதி மோசடிகள் மூலமும் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த அதிநவீன மோசடிகள் நாட்டின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலைத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடியவை.
தனிநபர் பாதுகாப்பு: ஏன் இது உங்கள் பிரச்சினை?
டிஜிட்டல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று மாத்திரம் ஒதுங்கிவிட முடியாது. இது ஒவ்வொரு பிரஜையின் வீட்டு வாசலிலும் நிற்கும் பிரச்சினை. இணையப் பாதுகாப்பு மீறல்களில் 95% மனிதத் தவறுகளாலேயே (Human Error) ஏற்படுகின்றன. ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் வாழ்நாள் சேமிப்பை ஒரு நொடியில் அழித்துவிடும்.
உதாரணமாக, இரு காரணி அங்கீகாரம் (2FA) என்பது உங்கள் வீட்டின் பிரதான கேட் பூட்டுக்கும், கதவு சாவிக்கும் இடையிலான மேலதிக பாதுகாப்பு போன்றது. கேட் பூட்டை ஒருவர் உடைத்தாலும், கதவு சாவி இல்லாமல் உள்ளே வர முடியாது. அதேபோல், உங்கள் கடவுச்சொல் கசிந்தாலும், 2FA உங்களைக் காக்கும்.
முக்கிய எச்சரிக்கை: மோசடியாளர்கள் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்களைப் போலவே 'போலி அழைப்பு அடையாளங்களை' (Spoofed Caller IDs) உருவாக்க முடியும். இது ஒரு திருடன் பொலிஸாரின் சீருடையை அணிந்துகொண்டு உங்கள் வீட்டுக்குள் நுழைவதற்குச் சமமானது. எனவே, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் ஊடாக வரும் தகவல்களை மேலதிகமாக உறுதிப்படுத்தாமல் நம்பாதீர்கள்.
நிறுவனங்களின் பொறுப்பு
வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாப்பது நிறுவனங்களின் தார்மீகக் கடமையாகும். ஒரு தரவு கசிவு ஏற்பட்டால், 78% வாடிக்கையாளர்கள் அந்த வங்கியை அல்லது நிதி நிறுவனத்தை விட்டு வெளியேறத் தயாராக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே இலங்கை மத்திய வங்கி (CBSL) அனைத்து நிதி நிறுவனங்களிலும் தகவல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை செயற்படுத்துமாறு வலியுறுத்துகின்றது.
டிஜிட்டல் கவசத்தை உருவாக்குதல்
• இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன:
• தெரியாத மின்னஞ்சல் இணைப்புகள் அல்லது லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
• உங்கள் கணினி அல்லது கையடக்கத் தொலைபேசியை விட்டு நகரும்போது 'லொக்' (Lock) செய்யுங்கள்.
• மின்னஞ்சல், வங்கி ஆப் மற்றும் சமூக ஊடகங்களுக்கு 2FA-வை செயற்படுத்துங்கள்.
• கணினி திரை அல்லது மவுஸ் தானாக நகருதல், வெப்கேம் (Webcam) விளக்கு தானாக எரிதல் போன்றவற்றை அவதானியுங்கள்.
• வங்கி அறிக்கை உங்கள் வங்கிப் பரிமாற்றங்களில் ஏதேனும் அனுமதியற்ற சிறிய மாற்றங்கள் உள்ளதா எனப் பாருங்கள்.
• முக்கிய கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றுவதோடு, அவை கடினமானதாக (Strong) இருப்பதை உறுதி செய்யுங்கள்.
• அன்டி-வைரஸ் மற்றும் இயங்குதளங்களை (Operating Systems) புதிய பதிப்பிற்கு (Update) மாற்றுங்கள்.
பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள்:
1. இணையக் கொடுமைப்படுத்துதல் (Cyberbullying): இணையத்தில் பிள்ளைகள் கேலி செய்யப்படுவதை அல்லது மிரட்டப்படுவதைக் கண்டறிய அவர்களிடம் நெருக்கமாகப் பழகுங்கள்.
2. கண்காணிப்பு: பிள்ளைகளின் இணையப் பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு மற்றும் அடிப்படை விதிகளை வகுத்திடுங்கள்.
இணையப் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்ப விடயமல்ல, அது நம் ஒவ்வொருவரினதும் தேசியக் கடமை. தொழில்நுட்பம் ஒரு பகுதி பாதுகாப்பை மட்டுமே தரும்; எஞ்சிய பாதுகாப்பை நமது விழிப்புணர்வு மிக்க செயற்பாடே உறுதிப்படுத்தும். தேசத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாக்க, "கிளிக் செய்யும் முன் யோசியுங்கள்" (Think Before You Click) என்ற தொனிப்பொருளை நாம் அனைவரும் கடைபிடிப்போம். உங்களின் ஒரு சிறு அவதானம் உங்கள் குடும்பத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாரிய அழிவிலிருந்து காக்கும் கவசமாகும்.
இலங்கை பாராளுமன்றம்
(நன்றி: தமிழன் - 26.04.2026)


No comments:
Post a Comment