இலங்கையின் நிதித்துறை அண்மையில் ஒரு பாரிய டிஜிட்டல் அதிர்வை எதிர்கொண்டது. அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிறுவனத்திற்கு (Australian Export Finance Agency) செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, திட்டமிட்ட முறையில் இணையக் கொள்ளையர்களால் திசைதிருப்பப்பட்டுள்ளது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சி குறித்து சர்வதேச அளவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இச்சம்பவம் நமது 'இறைமை சார்ந்த நம்பகத்தன்மைக்கு' (Sovereign Credibility) விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
நிதி அமைச்சுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கும் இடையிலான மின்னஞ்சல் தொடர்புகளை இடைமறித்த ஹேக்கர்கள், வங்கிக் கணக்கு விபரங்களை மிக நுட்பமாக மாற்றி இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளதாக தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ள தவகல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
