கிட்டத்தட்ட 35 வருட காலமாக இலங்கையின் இதழியல் துறையில் மட்டுமின்றி நாட்டின் அரசியல் சமூகத்திலும் (Polity) ஒரு இராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) செயற்பட்டு வந்த விக்டர் ஐவன் 2025 ஜனவரி 19 ஆம் தேதி காலமானார்.
கடந்த வாரம் நெடுகிலும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். சிங்களத்திலும், ஆங்கிலத்திலும், அதேபோல தமிழிலும் கணிசமான அளவிலான அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன.
(1960 களின் தொடக்கத்தில் இலங்கை கம்யூனிஸ்டு கட்சியின் உத்தியோகபூர்வ நாளிதழாக வெளியிடப்பட்ட) 'அத்த' பத்திரிகையின் ஆரம்பத்துடன் இலங்கையின் அச்சு ஊடகத்துறை ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசித்தது. பெரும் ஊடக நிறுவனங்களினால் அப்பொழுது வெளியிடப்பட்டு வந்த 'தினமின', 'லங்காதீப' மற்றும் 'தவஸ' போன்ற சிங்கள நாளிதழ்கள் குறிப்பிட்ட சில வரையறைகளை வகுத்துக் கொண்டு, இயங்கி வந்த ஒரு சூழலில் 'அத்த' பத்திரிகை வேண்டுமென்றே அந்த வரம்புகளை மீறியது.